இங்கிட்டு மோடி கிளம்பிய உடன் அங்கிட்டு சீனா நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி தரும்?
நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் நிறுத்த அனுமதி கோரி வருகிறது சீனா. ஆனால் மோடியின் பயணத்தால் அனுமதி தரும் முடிவை தெரிவிக்காமல் இருக்கிறது இலங்கை.
கொழும்பு: சீனா நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் பயணத்தால் அனுமதி தரும் முடிவை தெரிவிக்காமல் இருக்கிறது இலங்கை.
இலங்கையின் தென்பகுதியில் கொழும்பு, அம்பந்தோட்டா துறைமுகங்களில் சீனா நிலை கொண்டுள்ளது. ஈழத் தமிழரின் தாயக பிரதேசங்களான வடகிழக்கு மற்றும் இந்திய வம்சாவளியினரின் மலையகப் பகுதிகளில் இந்தியா பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவுக்கு செங்கம்பளம்
சீனாவுக்கு இலங்கை சிவப்புக் கம்பளம் விரிப்பது தொடர் கதையாகி வருகிறது. 2014-ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தவும் இலங்கை அரசு அனுமதி அளித்தது.
மோடி பயணம்
இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இலங்கையில் பிரதமர் மோடி தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார்.
மீண்டும் அனுமதி
இப்போது மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்த இலங்கையிடம் சீனா அனுமதி கோரியுள்ளது. வரும் 16-ந் தேதியன்று சீனா நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புக்கு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசோ இதுவரை அனுமதி தராமல் மறுத்து வருகிறது.
அனுமதி தரும்?
பிரதமர் மோடியின் பயணம் முடிவடைந்த பின்னர் சீனாவுக்கு இலங்கை அனுமதி வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இலங்கையின் உண்மை முகம் அம்பலத்துக்கு வரும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.