சிறிசேனாவை கொல்ல திட்டம்.. ராவின் பிளானை விசாரிக்கும் ''ஹவாய்'' போன் நிறுவனம்.. பின்னணி என்ன?
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய நடந்த திட்டம் குறித்து சீனாவின் ஹவாய் போன் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
தகவல் அளித்தவர்
இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தவர் நமல் குமாரா என்ற நபர்தான். நமல் குமாரா அதிபர் சிறிசேனாவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் ரகசிய நபர். இவர் அளித்த தகவலின் மூலம்தான் ரா, சிறிசேனவை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
உதவி கேட்டது
இவர் வைத்திருந்த ஹவாய் போனில் இதற்கான அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது. ரா உளவாளிகள் சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்டது, இந்திய அதிகாரிகளிடம் இவர் பேசியது என்று அனைத்து விவரங்களும் இதில் இருந்துள்ளது. ஆனால் அனைத்து விவரங்களும் தற்போது ஹவாய் போனில் இருந்து டெலிட் ஆகியுள்ளது. போனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இது டெலிட் ஆகியுள்ளது.
விசாரிக்க உள்ளது
இந்த நிலையில் இந்த தகவல்களை வெளியே எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதற்காக ஹவாய் நிறுவனத்திடம் இலங்கை அரசு உதவி கேட்டுள்ளது. ஹவாய் நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழுவை அமைத்துள்ளது.
பல உண்மைகள்
அந்த ஹவாய் போனில் தகவல்கள் அழிந்தது எப்படி, உண்மையில் பிரச்சனை காரணமாக அழிந்ததா இல்லை ஹேக் செய்யப்பட்டதா என்று விசாரிக்க உள்ளது. அந்த போனில் இருந்த விவரங்கள் வெளியாகும்பட்சத்தில் பல தலைகள் உருள வாய்ப்புள்ளது. இது ராஜபக்சே பதவி ஏற்றத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.