எல்டிடிஇ மீதான தடை நீக்கத்தை எதிர்த்து அப்பீல் செய்யும் ஐரோப்பிய யூனியன் - இலங்கை வரவேற்பு
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த அக்டோபர் 16-ம் தேதி நீக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-
விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததும், அந்த அமைப்பின் நிதியாதாரங்களை முடக்கியதும் நடைமுறை விதிகளின்படி செல்லாது என ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மேல் முறையீடு செய்ய உள்ளது.
நடைமுறை விதிகளின்படிதான் விடுதலைப் புலிகள் மீதான தடைகள் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததே தவிர, விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நீதிமன்றம் கூறவில்லை.
இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, விடுதலைப் புலிகள் மீதான தடையை செல்லுபடியற்றதாக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாகியுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த மேல்முறையீட்டை முடிவை இலங்கை அரசு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீவிரவாதத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.