இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தின் மிக மோசமான கெடுபிடிகள், சுற்றி வளைப்புகளுக்கு நடுவே தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிக்கச் செய்யும் வரை ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு முதல் மாவீரர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் கடைபிடித்து வந்தது.
ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்
மாவீரர் நாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாலை 6 மணிக்கு உரையாற்றுவார். பிரபாகரனின் இந்த உரை சர்வதேச அளவில் கவனம் பெறக் கூடியதாகவும் இருந்தது. 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனித்த பின்னர் உலகம் முழுவதும் தமிழர்களால் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை ராணுவம் கெடுபிடி
இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் நேற்று ராணுவத்தினரின் கடும் கெடுபிடிகள், சுற்றிவளைப்புகள், தாக்குதல்களுக்கு நடுவே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறை தீருவில் திடலில் பெருமளவிலான தமிழர்கள் ஒன்று திரண்டு உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பொதுச்சுடரேற்றினர். அப்பகுதியில் இலங்கை போலீசாரும் ராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வைத்திருந்த தீபங்களையும் போலீசார் தட்டிவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பு
யாழ்ப்பாண்ம சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை குற்றவாளிகள் போல போலீசாரும் ராணுவமும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனை பற்றி கவலைப்படாமல் சாட்டி துயிலும் இல்லத்திலும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வடக்கு கிழக்கில்...
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில், மன்னார் பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டி, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினர். தீவகப் பகுதியிலும் ராணுவத்தினரின் தடையை மீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. திருகோணமலையில் தமிழர்கள் பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை வணங்கினர்.
தமிழகத்திலும் கடைபிடிப்பு
தமிழகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நேற்று நடத்தின. இதில் கொளத்தூர் மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, திருமாவளவன் எம்.பி., சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.