இலங்கையில் ஒழிகிறது அதிபர் ஆட்சி- அரசியல் சாசன திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்!
கொழும்பு: இலங்கை அதிபரின் அதிகாரங்களைப் பெருமளவு குறைத்து அதிபர் ஆட்சியை அகற்ற வகை செய்யும் அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் தற்போது அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் "நிறைவேற்று அதிகார' முறை நடைமுறையில் இருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் குறைவு.
அதிபர் தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட அதிபராட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்று மைத்ரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
இதனடிப்படையில் அதிபருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் 19வது அரசியல் சாசன திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நேற்று நடைபெற்ற இலங்கை அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
இதன் மூலம் இலங்கையில் அதிபர் ஆட்சி முறை நீக்கப்பட்டு, அதிபர் மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து தேர்தல்களிலும், விகிதாசார பிரதிநிதித்துவ முறை நீக்கப்பட்டு, தொகுதி ரீதியாக நேரடியாகவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியும், பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே அதிபர் பதவியை வகிக்க முடியும் என்ற விதிமுறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.
அதிபரின் ஒரு ஆட்சிக்காலம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. மேலும் ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரே அதனைக் கலைக்கும் உரிமை மீண்டும் அதிபருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.