8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம்: 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக கச்சத்தீவு கடற்பரப்பு உள்ளது. ஆனால் கச்சத்தீவு கடற்பரப்புக்கு செல்லும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை அரிவாளால் வெட்டுவது, கற்களை கொண்டு தாக்குவது இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
ராஜபக்சே அழைப்பை ஏற்று... நவராத்திரி விழாவை கொண்டாட இலங்கை செல்கிறார் சுப்ரமணிய சுவாமி..!
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது
கடந்த சில நாட்களாக தமிழக- இலங்கை வடக்கு பகுதி மீனவர்களிடையே மோதல்கள் நிகழ்ந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அன்று எச்சரித்து விடுவிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியன்று 5 தமிழக மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. மேலும் 54 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர். கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்திருந்தது.
நாகை மீனவர்கள்
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அக்கரைப்பேட்டையில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிவனேசன், சிவகுமார் ஆகியோருக்கு சொந்தமான படகுகள்தான் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என்ற குற்றச்சாட்டின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
படகுகள் கதி?
இந்த 2 படகுகளில் இருந்த முருகன், கந்தன், சிவசக்தி உள்ளிட்ட 23 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இதேபோல் கேட்பாரற்று கிடந்து முற்றிலும் சிதிலமடைந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது.