இலங்கை பிரதமர் ரணில் இன்று டெல்லி வருகிறார்… மோடியுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று டெல்லிக்கு வருகை தருகிறார். அவர் நாளை இந்தியப் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
கொழும்பு: இன்று டெல்லி வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நாளை புதன்கிழமை சந்திக்கின்றார். அப்போது, இந்தியப் பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா வருகின்றார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வருகிறார். பிரதமர் ரணிலுடன் அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்கிரம, மற்றும் அதிகாரிகளும் வருகின்றார்கள்.
தாஜ் பேலஸ் விடுதியில் தங்க உள்ள இலங்கைப் பிரதமரை, இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நாளை காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை நண்பகல் ஹைதராபாத் இல்லத்துக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கைப் பிரதமர் ரணில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, மே மாதம் 11, 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை அன்று ராஜஸ்தான் மாநிலம் செல்கிறார். திருமண நிகழ்வு ஒன்றுக்கு தனிப்பட்ட முறையில் செல்லும் ரணில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கிருந்து மீண்டும் ரணில் கொழும்பு செல்கிறார்.