நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கே பிரதமர் பதவி.. சிறிசேனா திடீர் அறிவிப்பு
கொழும்பு: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.
இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்ட நிலையில் சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை ஏற்க வில்லை. ராஜபக்சே அரசுக்கு எதிராக ரனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
ராஜபக்சே பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியாத சூழல் இருந்ததால், நாடாளுமன்றத்தை திடீரென கலைத்தார் அதிபர் சிறிசேனா. ஆனால் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அதையடுத்து நாடாளுமன்றத்தில், ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றது. இருந்தும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.
எனவே, பிரதமர் அலுவலகம் அரசு பணத்தை செலவு செய்ய தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நான் தான் பிரதமர் என கூறி வருகிறார். ஆனால் ராஜபக்சே பிரதமர் பணியாற்றி வருகிறார். அரசியல் சாசனத்தை பச்சை படுகொலை செய்து சிறிசேனா, ராஜபக்சே ஆட்சி நடத்தி வருகிறார்கள். இவர்களில் யார் உண்மையான பிரதமர் என்ற குழப்பத்தில் மக்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் (அட போங்கப்பா..போரடிக்குது) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க அதிபர் சிறிசேனா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறையாவது சிறிசேனா போங்கு ஆட்டம் ஆடமாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.