படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கை அகதிகள்
கொழும்பு: ஆஸ்திரேலியாவிற்கு படகு வழியாக செல்ல முயன்ற 20 இலங்கை அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இன்று அதிகாலை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத்துறையின் மூலம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தில் பாதுகாவலர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்களுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளதாக தி ஆஸ்திரேலியன் நாளிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில், கடற்படையின் இரண்டு படகுகள், சிறிய படகு ஒன்றுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்ததை கிறிஸ்மஸ் தீவு மக்கள் கண்டிருந்த சூழலில் 'இது தஞ்சக்கோரிக்கையாளர்களின் படகு' என்ற சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் இத்தகவலை ஆஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
கடந்த மார்ச் மாதம், அகதிகள் படகு ஒன்றை ஆஸ்திரேலியா இடைமறித்து, 25 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருந்ததை ஆஸ்திரேலியா குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் எந்த அச்சமுமின்றி நாடு திரும்பலாம் என அழைப்பு விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.