நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் சுதந்திரக் கட்சியில் ராஜபக்சேவுக்கு 'சீட்' இல்லை என அறிவிப்பு!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது; அவரை நியமன எம்.பி.யாகவும் நியமிக்கமாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கையின் அதிபர் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தவர் மகிந்த ராஜபக்சே. இதனால் அரசியலை விட்டே ஒதுங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பிரதமராவதற்கான வியூகங்களை ராஜபக்சே வகுத்து வருகிறார். இதற்காக தற்போதைய அதிபர் சிறிசேனவுடன் சமாதானமாக போவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ராஜபக்சேவுக்கு நோ சீட்
மகிந்த ராஜபக்சே தரப்பில், தம்மை ஆளும் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனரத்ன, சுதந்திர கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சே போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது; இதற்கான வேட்புமனுவை அவருக்கு வழங்கமாட்டோம். தேர்தலுக்குப் பின்னர் நியமன எம்.பியாகவும் கூட ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.
அதிர்ச்சியில் மகிந்த
நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்தல் முடிவடைந்த பின்னர் அதிபர் சிறிசேனதான் முடிவு செய்வார் என்று அறிவித்தார். இதனால் ராஜபக்சே தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிறிசேன சொல்லவே இல்லை..
இந்த நிலையில் ஆளும் சுதந்திர கட்சியில் உள்ள ராஜபக்சே ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன, அமைச்சர் ராஜித பொய் சொல்கிறார்.. ராஜபக்சேவுக்கு சீட் வழங்க முடியாது என சிறிசேன கூறவே இல்லை என கூறியிருக்கிறார்.
மகிந்த தனிக்கட்சி?
இதனால் இலங்கை ஆளும் சுதந்திரக் கட்சியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனரத்ன கூறியதைப் போல ராஜபக்சேவுக்கு சீட் வழங்கப்படாமல் போனால் அவர் தமது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே மகிந்த ராஜபக்சேவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவரது தரப்பில் அந்நாட்டின் காவல்துறை தலைவரிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலம்பெயர் தமிழர்களுடன் சிறிசேன அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளை தாங்கள் வெளியில் இருந்து கவனித்து வருகிறோம் என்று இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறியுள்ளார்.