முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் ஏராளமான தமிழர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். போரின்போது தமிழர்களிடம் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக கைப்பற்றப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதுபற்றி தமிழ் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இருப்பினும் இன்னும் நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி சார்பில் யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசுகையில், முடிவுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழ் மக்களின் குறைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கவில்லை. தமிழர்கள் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை அரசு நிறுத்த வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், புத்த மதக் கோவில்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும், ராணுவ பயன்பாட்டிற்காக தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், காணாமல் போனவர்களை கண்டறிய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.