இலங்கைப் பிரதமரின் டெல்லி பயணம்… சர்ச்சைக்குள்ளாகும் திருகோணமலை பெட்ரோல் கிடங்கு விவகாரம்
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தால் திருகோணமலை எண்ணெய் கிடங்குகள் தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கொழும்பு: ஐந்து நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தடைந்த இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். இந்நிலையில், திருகோணமலை எண்ணெய் கிடங்குகள் விவகாரம் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
திருமலையிலுள்ள எண்ணெய்க் கிடங்குகள் இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான தீர்மானத்தை இலங்கை அரசு எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக இந்தியா வந்திருக்கின்ற பிரதமர் ரணில், இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் இலங்கையில் செய்திகள் பரவின. இதற்கு தென் இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிலோன் பெட்ரோலியன் கார்ப்பரேஷனைச் சேர்ந்த பணியாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி உறுதி
இதனையடுத்து, இதுபோன்ற உடன்படிக்கை எதுவும் செய்யப்படப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்தனர். இந்த உறுதிக்குப் பின்னர் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கைக்கு அழைப்பு
ரணில், மோடியின் இன்றைய சந்திப்பின் போது, மே 12ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள கௌதம புத்தரின் ஜெயந்தி தினமான விசாகத் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் அழைப்பு விடுக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மோடி இலங்கை செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.
பொருளாதார உறவு
டெல்லி புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைப் பிரதமர் ரணில், இந்தியாவுடன் பொருளாதாரக் கூட்டுறவை வலுப்படுத்திக் கொள்வதை தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்வது குறித்தும் இந்திய பயணத்தின் போது ஆராயப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
ஒப்பந்தங்கள் ரெடி
இந்தியப் பிரதமர் மோடி கொழும்புவிற்கு செல்லும் போது இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுக வளர்ச்சி, திருகோணமலை சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் கிடங்குகளை பராமரிப்பது ஆகிய திட்டங்களுக்கு இந்தியாவின் முதலீட்டைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரு நாட்டு அரசுகளும் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
திருகோணமலை எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு தென்னிங்கையில் குறிப்பாக சிங்களவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கள் உருவாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து இலங்கை அரசு என்ன செய்யப்போகின்றது என்ற கேள்விக்களுடனேயே இந்தியப் பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையில் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கள் அமைந்திருக்கும் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.