இலங்கை அதிபர் தேர்தல் நாளில் மிகப்பெரும் கலவரம் வெடிக்க வாய்ப்பு: சந்திரிகா எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலின்போது பயங்கர கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா அச்சம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக மைத்திரி பாலா சிறீசேனா நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மைத்திரி பாலா சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா நிருர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் வகையில் தேர்தல் அன்று பயங்கர கலவரத்தை ஏற்படுத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். 2010ம் ஆண்டு நடந்த தேர்தலின்போதும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோன்று இப்போதும் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டுமென்றால், சர்வதேச குழு இதை நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால், அதற்கு ராஜபக்சே இடம் தரமாட்டார். நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் ராஜபக்சே அதை கண்டுகொள்ளவில்லை. அதனால், தேர்தல் உண்மையாக நடைபெறுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரிகா பேட்டியளித்தார்.
இதனிடையே புத்தரையும் ராஜபக்சே விலை பேசிவிடுவார் என்று இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரி பாலா சிறீசேனா கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், "ராஜபக்சே ராணுவம், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரையும் தங்களுக்கு சார்பாக பயன்படுத்துகிறார். ராஜபக்சே செய்த குற்றங்களுக்காக புத்த பெருமானே இலங்கையை விட்டு வெளியே சென்றுவிட்டார். விட்டால், புத்தரையும் ராஜபக்சே விலை பேசிவிடுவார்
ராஜபக்சேவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்குமானால் எதற்காக மக்கள் பணத்தில் தேர்தல் விளம்பரம் செய்ய வேண்டும். தெருவில் நடமாடும் பசுமாடு முதுகிலும் தேர்தல் விளம்பரத்தை எழுதிக்கொண்டுள்ளார் ராஜபக்சே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.