நெஞ்சை பிழிய வைத்த மனிதவெடிகுண்டாக வெடித்தவரின் பிஞ்சு மகளின் 'வாப்பா' குரல்!
Recommended Video
அம்பாறை: இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறையில் சாய்ந்தமருதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மனிதவெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சிக்கிய தற்கொலைதாரியின் மகளை இலங்கை ராணுவத்தினர் காப்பாற்றியபோது 'வாப்பா' என அந்த பிஞ்சு குரல் கத்தியது அனைவரதும் நெஞ்சையும் பிழிய வைத்தது.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப. தெய்வீகன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சாய்ந்தமருதில் படையினருக்கும் தீவிரவாதக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் தற்கொலைக்குண்டுதாக்குதல் மேற்கொண்டு இறந்துபோனவனின் மகளை படையினர் பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு வந்து அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். இரத்தக்கறைகளை துடைத்துவிடுகிறார்கள். ஆயுதங்கள் தரித்த சீருடைப்படையினர் அவளை தூக்கிக்கொண்டுவரும்போது அவள் கதறி அழவில்லை. அவளுக்கு தன்னைச்சுற்றி என்ன நடைபெறுகிறது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியிலிருக்கிறாளா அல்லது நேற்றிரவு வரை அப்பாவும் இப்படித்தான் ஆயுதத்துடன் இருந்தாரே, அவருடனும் இவர்களைப்போல இன்னும்பலர் ஆயுதங்களுடன் இருந்தனரே என்று பழக்கப்பட்டுவிட்டாளா தெரியவில்லை. ஆனால், அம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றி, கிடத்தி வைத்து இரத்தக்கறைகளை துடைத்துவிடுகின்றபோதுதான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. கூடவே, அப்போதுதான் அதிச்சியுற்று நினைவு திரும்பியவள்போல சூழ்நிலையை வித்தியாசமாக உணர்வதாகவும் தெரிகிறாள்.
உதடுகள் துடிக்க "வாப்பா" என்று அழுகிறாள்.
இதயத்தை ஒற்றை நாளத்தில் பிடித்து இழுத்து வெளியில் போட்டுவிட்டதுபோல ஒரு கணம் உணர்கிறேன். சுற்றிலும் எல்லா சத்தங்களும் காற்றிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டது.அவள் அழைக்கின்ற "வாப்பா" என்ற சொல்தான் திரும்ப திரும்ப கேட்ட வண்ணமுமிருக்கிறது. உலகத்திலேயே கொடியதொரு சத்தமாக அது திரும்ப திரும்ப என் காதுகளில் இப்போதுவரை ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
Aftermath of shootout at Sri Lanka bombers’ suspected militant hideout
— RT (@RT_com) April 27, 2019
READ MORE: https://t.co/18jyal6gzV pic.twitter.com/zfjuvJw7lq
அந்த சத்தமும் அவளது அழுகையும் அந்த நடுக்கமும் இதயத்தை சுருள் சுருளாக வெட்டி வெயிலில் போட்டுவிட்டதுபோலிருக்கிறது.
ஆனால், இவளது முகத்தை போனவருடமும் பார்த்தேன்.
சிறையிலிருந்து வந்து தனது மனைவியின் மரணச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆனந்தசுதாகரனின் மகள் தானும் சிறைக்கு போகப்போவதாக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினாளே! அவள் முகத்திலும் இந்தக்கொடூரமான அழுகையை பார்த்தேன். தகப்பனை இழந்துகொண்டிருந்த அந்த இறுதிக்கணங்கள் அவள் கண்களில் எப்படியெல்லாம் வெடித்து வழிந்துகொண்டிருந்தது என்பதைப்பார்த்தேன்.
இந்தச்சம்பவங்கள் எல்லாமே வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறுகின்றன. அவற்றுக்கு வெவ்வேறு ஆட்களை காரணமும் காட்டுகிறோம்.
ஆனால், இந்தக்குழந்தைகள் கேட்பவற்றை கொடுப்பதற்கு எம்மிடம் ஒன்றுமேயில்லை என்கின்றபோதும் அந்தக்குரல்களை கேட்கும்போது நாங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் உலகின் அத்தனை புனிதங்களும் தகர்ந்துபோகின்றன. மானிட நேயம், மனுநீதி என்றும் போலியாக கட்டி புழுவேறிப்போயிருக்கும் அத்தனை அழுக்குகளும் எங்களை அம்மணமாக்கிவிடுகின்றன.
அவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.. இலங்கையில் 15 பேர் பலியான சம்பவம்.. ஐஎஸ் பொறுப்பேற்பு!
இன்னமும் அவள் அழைத்துக்கொண்டுதானிருக்கிறாள்.
"வாப்பா......"
இவ்வாறு தெய்வீகன் எழுதியுள்ளார். இப்பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.