சிறையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி- யு.எஸ். மருத்துவர்கள் பரிசோதிக்க அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணம்: இலங்கை சிறையில் இருந்த போது விஷ ஊசி போடப்பட்டது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்கா விமானப் படை மருத்துவர்கள் பரிசோதிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துவிட்டது.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டு ராணுவ முகாம்களில் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இப்படி விடுதலையான விடுதலைப் புலிகளில் 109 பேர் மர்மமான முறையில் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியும் ஒருவர்.
11,000 புலிகள் உயிர் ஊசல்
இது தொடர்பாக இலங்கை சிறையில் இருந்த விடுதலைப் புலிகள் கூறுகையில், தங்களுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது என்றும் 11,000 புலிகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வதேச மருத்துவர்கள் குழு
இச்சம்பவம் தொடர்பாக தமிழர்கள் வாழும் இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை பரிசோதிக்க சர்வதேச மருத்துவர்கள் குழுவை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அமெரிக்கா ராணுவ மருத்துவர்கள்
இந்த நிலையில் இலங்கை ராணுவத்துடனான கூட்டு பயிற்சிக்காக அமெரிக்கா ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்காவின் விமானப் படை மருத்துவர்களும் உள்ளனர். இவர்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை பரிசோதிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.
அனுமதிக்க இலங்கை மறுப்பு
ஆனால் இதை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார். அமெரிக்கா மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.