இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்கிறது!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் களத்தில் இருக்கிறார்.
தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ்க் கட்சிகள் களத்தில் இருக்கின்றன. வன்முறைகள், பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் என தேர்தல் களம் அமளிதுமளியாகத்தான் காட்சியளித்தது.
அதுவும் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் ஓயும் நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தலில் வென்றாலும் நிச்சயம் உங்களை பிரதமராக்க முடியாது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பிரசாரங்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதன் பின்னர் எந்த ஒரு வேட்பாளரும் எந்த வகையிலான பிரசாரத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலை கண்காணிக்க சர்வதேச பார்வையாளர்களும் இலங்கையில் குவிந்துள்ளனர். வரும் 17-ந் தேதியன்று திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.