இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும்: அமைச்சர் ரிசாத் பதியுதீன்
இலங்கையில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு: இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அம்பாறை, கண்டி பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளை தூண்டிவிட்ட பவுத்த பிக்குகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியதாவது:
முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாப்பது குறித்து அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் உறுதி அளிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடர கூடாது.
மட்டக்களப்பில் வன்முறையை தூண்டுகிறார் பவுத்த பிக்கு. முஸ்லிம்களின் சொத்துகளை அழித்து கோழைகளாக்க முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை அழித்து அவர்களை கோழைகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள்தான் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கின்றன.
இவ்வாறு ரிசாத் பதியுதீன் கூறினார்.