யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் நள்ளிரவில் இடிப்பு - இலங்கையில் பதற்றம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட ஸ்தூபியை இரவோடு இரவாக இடித்து தள்ளியதால் இலங்கை தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நள்ளிரவு தொடங்கி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நிகழ்ந்த போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினரும், ராணுவமும் பல்கலைக்கழக வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இடிக்காதே இடிக்காதே என்றும் இன அழிப்பை செய்யாதே என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. சமீபத்தில் ராணுவத்தினர் நேரடியாக வருகை தந்து துணைவேந்தர் உடன் நினைவிட தூபிகளை பார்வையிட்ட நிலையில் தற்போது இடித்து தள்ளப்பட்டுள்ளது.