மே 18- தமிழின அழிப்பு நாள்– இலங்கை வட மாகாண சபை பிரகடனம்
மே 18-ந் தேதி தமிழின அழிப்பு நாள் என இலங்கை வட மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ந் தேதி தமிழின அழிப்பு நாள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அனந்தி சசிதரன், மே 18 தமிழின அழிப்பு நாள் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதில், உலகத் தமிழர்கள் அனைவரும் மே18-ந் தேதியை இன அழிப்பு நாளாக கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதை வடக்கு மாகாண சபை முழு மனதாக ஏற்றுக் கொள்வதாக வடக்கு மாகாண சபைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.
இதனிடையே முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறும் வகையில் அம்பாறை திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரம் அருகே போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தலைவி செல்வராணி தலைமையில் ஒன்று கூடல் நடைபெற்றது.
அப்போது, இனியொரு முள்ளிவாய்க்கால் எமது இலங்கையில் இடம்பெறக்கூடாது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை ஆதரித்து நாங்களும், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஆதரவினையும் தெரிவிப்பதற்காகவே இந்த ஒன்று கூடலை நடத்தியிருக்கின்றோம் என செல்வராணி தெரிவித்தார்.