இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று 15வது பொதுத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அந்த நாட்டு தேர்தல் குறித்த ஒரு பார்வை இதோ:
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113.
மொத்தமுள்ள 225 இடங்களில், 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று நேரடியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சிய இடங்கள் நியமன உறுப்பினர்களுக்கானது. கட்சிகளின் வாக்குவிகிதாச்சாரப்படி அந்த நியமனம் நடைபெறும்.
இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு இரண்டு கட்டங்களாக முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி, இன்று மாலை வாக்குப் பதிவு முடிந்தவுடன் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று நள்ளிரவு 11 மணிக்குள் தபால் ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.
இதைத் தொடர்ந்து தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முடிவுகள் நாளை, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வெளியிடப்படும்.
இலங்கையின் மொத்தத் தேர்தல் மாவட்டங்கள், 22 ஆகும். இலங்கை தேர்தல் மாவட்டங்களில் கொழும்பில் அதிகபட்சமாக 19 தொகுதிகளும் குறைந்தபட்சமாக திரிகோணமலையில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 12,314. இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 1,50,44,490.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 64. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 3653 ஆகும்.
சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 2498. இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை, 6151. இதில் அதிகபட்சமாக கொழும்பில் 792 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பொலநறுவையில் 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 202 பேர் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் நாடுகள் அமைப்பு, தெற்காசிய தேர்தல் மேற்பார்வை ஒன்றியம் உட்பட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இந்த பணிக்காக வருகை தந்துள்ளார்கள். கஃபே, பெஃப்ரல் உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.