இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன? பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய
Recommended Video
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களின் கதி என்ன? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார் இலங்கை அதிபர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சே.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுகிறார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தபாய சர்வதேச செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை கொழும்பில் நடத்தினார். அதில் மகிந்த ராஜபக்சேவும் பங்கேற்றார்.
திணறிய கோத்தபாய
இச்சந்திப்பில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் குறித்து சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் திணறினார் கோத்தபாய ராஜபக்சே.
மகிந்த தலையீடு
ஒருகட்டத்தில் மகிந்த ராஜபக்சே தலையிட்டு சில கேள்விகளுக்கு பதில் சொல்லி கோத்தபாயவை காப்பாற்றினார். மேலும் கோத்தபாய கூறுகையில், ராணுவ நடவடிக்கைகளில் அடையாளம் காண முடியாத சடலங்கள் இருக்கும்.
மிக சிறந்த புனர்வாழ்வு
அதனடிப்படையில் காணாமல் போனவர்கள் என குறிப்பிடுகின்றனர். சரணடைந்தவர்கள் வேறு எங்கும் தடுத்து வைக்கப்படவில்லை. உலகிலேயே மிகச் சிறந்த புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
தலைமை தாங்கவே இல்லை
சரணடைந்தவர்கள் மீண்டும் வரவில்லை என்பது வெறும் ஊகம்தான். இறுதி யுத்த காலத்தில் ராணுவத்தின் தளபதியாக நான் இருக்கவில்லை. நீங்கள் அனைவருமே தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னுடைய சகோதரர் மகிந்தவும் கூட அதிபராக இருந்தாலும் ராணுவ தளபதி அல்ல. ராணுவத்தை வழிநடத்தக் கூடியவர் அவ்வளவுதான் என சமாளித்தார்.