இலங்கை அதிபர் தேர்தலில் டெலோ சிவாஜிலிங்கம் போட்டி
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் டெலோ இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சிவாஜிலிங்கமும் போட்டியிடுகிறார்.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே, விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதுவரை யாருக்கு ஆதரவு என தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு கருணா, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெலோ இயக்க பிரமுகரும் முன்னாள் எம்பியுமான சிவாஜிலிங்கமும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவருக்கான டெபாசிட் பணம் செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பில் சிவாஜிலிங்கம் போட்டியிட உள்ளார். புலம் பெயர் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று தாம் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.