நெருப்பென்னும் 'சூப்பர் ஸ்டாரை' நெருங்கிப் பார்க்க அழைக்கும் இலங்கை 'டெலிகாம்'!
கொழும்பு: ரஜினிகாந்தின் கபாலி நாடு விட்டு...நாடு.. கண்டம் கண்டம் விட்டு அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசுக்கு சொந்தமான 'டெலிகாம்' துறையும் கபாலியை முன்வைத்து ரஜினியை நேரில் சந்திக்க சில சலுகைகளை அறிவித்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி நேற்று மாலை உலகின் பல நாடுகளில் வெளியானது. இன்று அதிகாலை இந்தியாவில் வெளியிடப்பட்டது.
அதே நேரத்தில் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதுவும் எச்டி தரத்தில் முழுப்படத்தையுமே நாசகாரர்கள் வெளியிட்டுவிட்டார்கள்.
தெறிக்கிறது...
ஆனால் ரஜினியின் திரைப்படத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் ரசிகர்கள் 'தெறிக்க' விட்டு கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை டெலிகாம்
இதனிடையே கபாலி ஜூரத்தில் இலங்கையும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு சொந்தமான டெலிகாம் துறை, கபாலி படப் பாடல்களை முன்வைத்து ரஜினியை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுத்திருக்கிறது.
காலர் டியூனுக்கு கூப்பிடுங்க..
இது தொடர்பான விளம்பரம் ஒன்றில், நெருப்பென்னும் 'சுப்பர்' ஸ்டாரை' (ஈழத் தமிழர்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள்) நெருங்கியே பார்க்கலாம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கபாலிடா... மகிழ்ச்சி போன்ற கபாலி வசனங்கள் மற்றும் உலகம் ஒருவனுக்கா, நெருப்புடா போன்ற பாடல்களையும் வெளியிட்டு இதை உங்கள் காலர் டியூனாக வைக்க எங்களை அழைக்கவும்.... அப்படி அழைத்தால் ரஜினிகாந்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறது அந்த விளம்பரம்.
மும்மொழிகளில்...
இது தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் இச்சலுகை ஆகஸ்ட் 15-ந் தேதிவரைதானாம்...
சும்மா அதிருதுல்ல..