"சர்வதேச விசாரணைக்கு உட்படாவிட்டால் சூடானை போல இலங்கை பிரிக்கப்படும்"-எதிர்க்கட்சி எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் இறுதிகட்ட உள்நாட்டு போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த அரசு ஒத்துழைக்காவிட்டால், சூடான் பிரித்ததை போன்ற நிலை இங்கும் ஏற்படும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமீபத்தில் அறிவித்தார். இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ளது. வாக்கெடுப்பும் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதபடியாலேயே, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை மூன்றாண்டு காலம் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் அந்த உள்நாட்டு விசாரணை நடக்கவில்லை. இதில் அடைப்படைத் தவறு இழைத்தது அரசாங்கம்தான். சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துள்ள அரசு, நாடாளுமன்றத்திடம் தீர்மானம் எடுக்கும் உரிமையை கொடுப்பது 'கேலிக்கூத்து'.
'கடந்த பல ஆண்டுகளில் இலங்கை விவகாரத்தில், ஐநா மனித உரிமைகள் பேரவை பல தீர்மானங்களைக் கொண்டுவந்தது. அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்திடம் எதுவும் கேட்கப்படவில்லை. அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் தான் முடிவுகளை அரசாங்கம் எடுத்திருந்தது.
சூடான் உள்நாட்டு யுத்தம் பற்றி விசாரணை நடத்துமாறு ஐநா, சூடானிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் சூடான் அதனைச் செய்யவில்லை. அதனால் இந்த இரண்டு இனங்களும் ஒன்றாக வாழமுடியாது என்று ஐநாவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இறுதியில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி நாட்டைப் பிரித்தார்கள். இலங்கை அரசு பிடிவாதம்பிடித்தால், சூடான் நிலை இலங்கைக்கும் ஏற்படும். இவ்வாறு அந்த பேட்டியில் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.