தமிழக மீனவர்கள் 46 பேரின் காவல் நீட்டிப்பு... இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிப்ரவரி 12ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 46 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றோடு முடிவடையும் நிலையில் மீனவர்கள் இன்று ஊர்காற்றுறை மற்றும் பருத்திதுறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீனவர்களின் சிறைக்காவலை வரும் பிப்ரவரி மாதம் 12ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக மீனவர்களின் இந்த சிறைக்காவல் நீடிப்பு உத்தரவால் கடலோர மீனவ கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.