இலங்கையில் இந்தியக் குழு ஆய்வு: வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக தமிழர்கள் போராட்டம்
கொழும்பு: இந்தியாவின் நிதியுதவியோடு இலங்கையில் போரில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை இந்திய குழுவினர் நேரில் சென்றுப் பார்வையிட்டனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையிலான குழு இலங்கை சென்றுள்ளது. இந்தியக் குழுவில், இந்திய துணைத் தூதர் மகாலிங்கம், வெளியுறவுத்துறை செயலாளர் பினய் குமார், வெளியுறவு அமைச்சக நிதி இயக்குநர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, வெளியுறவு அமைச்சகத்தின் கீழ்நிலைச் செயலர் ஜோன் மாய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியக் குழு வவுனியாவின் புதுக்குளத்தில் வீடு கட்டும் திட்டங்களை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே வீடுகளை பெற்ற பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனிடையே, இலங்கையில் வீடிழந்த தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் மோசடி நடைபெறுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் நடைபெற்றது. வீடு வழங்கும் திட்டத்தில் இலங்கை கைத்தொழில் அமைச்சர் தலையீடு இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
வவுனியா மாவட்ட மக்கள் குழு சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.