தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்: தமிழர் நலனுக்காக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:
தமிழ் மக்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அமைப்பு தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். மக்கள் விரும்பினால் மீண்டும் தான் அரசியலுக்கு வர தயார் எனவும் கூறியிருக்கின்றார்.
தற்போது ஆட்சி அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி சபைகள் ஒற்றுமையாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து சபைகளுமே தொங்கு சபைகளாக உள்ளன.
மாகாண சபை நிலையானதாக இருக்க வேண்டும். ஆகவே எதிர்கால மாகாண சபை தமிழத்தேசிய சிந்தனை கொண்டவர்களால் ஆளப்பட வேண்டும்.
கொள்கையால் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம். 100 க்கு 100 புனிதம் பேணுவதால் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேட்கப்பட வேண்டும்.
தமிழ் மண்ணில் சிங்கள மயமாக்கலை நிறுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆகவே எங்கள் மண்ணை மக்களை பாதுகாக்க ஒரே சிந்தனை கொண்ட கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்.
எமது மண்ணில் தனித்துவத்துடன் நாங்கள் வாழ வேண்டுமானால் சரியான தலைமைத்துவம் தேவை, இந்த தலைமை மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்..