சுஷ்மாவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு! மீள்குடியேற்றம் குறித்து புகார்!!
கொழும்பு: இலங்கை சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இலங்கை அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் குறித்து அவர்கள் சுஷ்மாவிடம் புகார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்ற சுஷ்மா ஸ்வராஜை நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழர் பகுதிகளில் மீள் குடியேற்றம் முறையாக நடைபெறவில்லை என்று புகார் கூறிய அவர்கள் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெரும்படி இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சனை, ராணுவ நெருக்கடிகள் குறித்தும் சுஷ்மாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் விரிவாக விளக்கினர்.
அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுஷ்மாவிடம் வலியுறுத்தினர்.