மைத்ரிபால சிறிசேன, சந்திரிகா, சம்பந்தனுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்தியா- இலங்கை கூட்டு குழுவின் 9-வது மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இலங்கை சென்றார். அம் மாநாட்டில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கொழும்பில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். அப்போது இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக இருவரும் விவாதித்தனர். மேலும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. பின்னர் முன்னாள் அதிபர் சந்திரிகாவையும் சுஷ்மா சந்தித்தார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார். ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைகள், காணாமல் போனோரை விடுவித்தல், மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து சுஷ்மாவிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.