இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள்: இண்டர்போல் எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக அந்தநாட்டு புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக ஏற்கெனவே தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சிலர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கும் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகள் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருவதாகவும் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள இல்ஙகையை ஒரு தளமாக பயன்படுத்தி வருவதாகவும் இண்டர்போல் எச்சரித்துள்ளது.
இலங்கையில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு வல்லுநரான ரோகன் குணரத்னா கூறியுள்ளார்.