காணாமல் போனவர்களை மீட்டுத் தரக் கோரி இலங்கை தமிழர் பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டம்!
யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டுத் தரக் கோரி இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்: யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை மீட்டு தரக் கோரி இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இவர்களது கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.
காணாமல் போனோரை மீட்டுத் தர வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முழு அடைப்புப் போராட்டத்தால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதே போன்று கிழக்கு பகுதிகளிலும் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக கொழும்பிலிருந்து தமிழர் பகுதிக்குச் செல்லும் பேருந்துகள், ரயில்கள் நிறுத்தப்பட்டன.