இலங்கை போர்க்குற்ற அமெரிக்க வரைவு: தமிழகத்தில் எதிர்ப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு
கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்பித்துள்ள வரைவு தீர்மானத்தை தமிழகத்திலுள்ள அமைப்புகளும், பல கட்சிகளும் எதிர்க்கும் நிலையில், இலங்கை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க வரைவு தீர்மானத்தை வரவேற்றுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்து இருப்பதை உறுதி செய்தது. இதுகுறித்து மனித உரிமை ஆணையர் 19 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம், இதில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறி வருகிறது. ஜனவரி மாதம் உள்நாட்டு விசாரணையை தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விசாரணை நடத்தினால் அது இலங்கை அரசுக்கு சாதகமாக இருக்கும். தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது. அதில் இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் குழுவினருடன் இலங்கை குழுவினர் தொடர்ச்சியாக விவாதங்கள் நடத்தினர்.
இதையடுத்து இறுதியாக திருத்தப்பட்ட வரைவு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா சில தினங்கள் முன்பு தாக்கல் செய்தது. அதில், போர்க்குற்ற புகார்களை இலங்கையின் நீதித்துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும் காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வக்கீல்களும், விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணை அமைப்பில் இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இறுதி தீர்மானத்தின்மீது, வரும் 30ம் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடைபெறும். அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல, அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை வரவேற்பதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சட்ட வல்லுனர்கள் இடம் பெறும் விசாரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.