இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம்.. ஐ.நா.வுக்கு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை
கொழும்பு: இலங்கை போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு 3 இலங்கை தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சர்வதேச யுத்தக்குற்றங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டமையை மீண்டும் ஒருமுறை சர்வதேச சமூகத்துக்கு நினைவுறுத்த விரும்புகின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை குற்றம் என்பவற்றை விசாரிப்பதுக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றினை கண்டறிவதற்கான கருத்தாடல்கள் மற்றும் அதற்கான நியாயாதிக்கங்கள் குறித்து விவாதிப்பதில் கடந்த ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன.
ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை மீதான, ஐ.நா அலுவலகத்தின் விசாரணை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளது.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசக் குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக விவாதங்களும் பேச்சுவாத்தைகளும் இடம்பெற்று வருகின்றன.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை பொறிமுறையோ அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக விசாரணை பொறிமுறையோ நீதியை வழங்காது என்பதனை நாம் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.