ராஜபக்சேவை வழக்கம் போல ஆதரிக்கும் மலையகத் தமிழர் கட்சி ஆறுமுகம் தொண்டமான்!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வழக்கம் போல மகிந்த ராஜபக்சேவை ஆதரிப்பதாக இந்திய வம்சாவளியான மலையகத் தமிழர்களின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் மலையகத் தமிழர்கள் பொதுவாக ஆளும் கட்சியை சார்ந்தே செயல்படுவது வழக்கம். கடந்த காலங்களில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேவே போட்டியிட இருக்கிறார்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவை ஆறுமுகம் தொண்டமான் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விஜயானந்த ஹெரத், ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்துள்ளார் என்றார்.