தமிழ் பிரபாகரனை நாடு கடத்தியது இலங்கை அரசு.. விரைவில் சென்னை வருகிறார்!
வன்னிக்கு சுற்றுலா விசாவில் பயணம் மேற்கொண்ட தமிழ் பிரபாகரனை, விசா விதிமுறை மீறல் காரணம் காட்டி கைது செய்தது இலங்கை அரசு.
அவரை தீவிரவாதிகளை விசாரிக்கும் கொழும்பின் நான்காம் மாடி கட்டடத்தில் அடைத்தது. ஆனால் இந்தக் கைதுக்கு உலகமெங்கும் கிளம்பிய எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து அவரை குடிவரவுத் துறையிடம் நேற்று ஒப்படைத்தது.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் பிரபாகரனை இன்று சந்தித்தனர். அவர்கள் தமிழ் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இலங்கை காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோஹன இதுகுறித்து பேசுகையில், "தமிழ் பிரபாகரன் வன்னியில் ராணுவ நிலைகளைப் படமெடுத்தார். இதுதான் பிரதான குற்றச்சாட்டு. சுற்றுலா விசாவில் வந்த அவர் இப்படி படமெடுத்திருந்தால் அது குற்றமே. அதற்கு இலங்கை சட்டப்படி தண்டனை உண்டு. ஆனால் அவர் சுற்றுலா விசா விதிகளை மீறி, செய்தியாளராக செயல்பட்டிருந்தால் அவரை நாடுகடத்துவோம்," என்றார்.
இப்போது தமிழ் பிரபாகரன் விசா விதிகளை மீறியதாகக் கூறி நாடுகடத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது. இன்று தமிழ் பிரபாகரன் சென்னை வருவார் எனத் தெரிகிறது.