தமிழர்களின் நிலை பயங்கரமாக இருக்கிறது- டேவிட் கேமரூன்
யாழ்ப்பாணம்: என்னிடம் பல்வேறு குறைகளை இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அதைக் கேட்கவே பயங்கரமாக இருக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
அதிரடியாக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கேமரூன் அங்குள்ள நூலகத்தில் வைத்து அரசியல் தலைவர்களும், நல்வாழ்வு மையத்தில் வைத்து தமிழர்களையும் சந்தித்துப் பேசினார்.
தனது தமிழர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் டிவிட்டரில் கேமரூன் கூறுகையில், இங்குள்ள மக்கள் என்னிடம் கூறியதைக் கேட்டபோது பயங்கரமாக இருந்தது. அதிர்ச்சியாக இருந்தது. இங்குள்ள ஒரு நல்வாழ்வு மையத்தில் தற்போது இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சி
இன்னொரு டிவிட் செய்தியில், இங்குள்ள அரசியல் தலைவர்கள் நான் இங்கு வந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனது வருகை தங்களது துயரத்தை வெளியுலகம் அறிய உதவும் என்று கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் நூலகத்தில் தமிழர்களுடன் சந்திப்பு
யாழ்ப்பாணம் வந்த கேமரூன் அங்குள்ள நூலகத்திற்குச் சென்றார். அங்கு வடக்கு மாகாண முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள வெறியர்கள் முன்பு தாக்கி தீக்கிரையாக்கியது குறித்து விவரித்தனர்.
தமிழர்களின் கண்ணீர்க் குமுறல்
பின்னர் தமிழர்களையும் சந்தித்தார் கேமரூன். அப்போது பெண்கள் பலர் அழுதபடியும், வேதனையுடனும் தங்களது சிரமங்களைத் தெரிவித்தனர். பலர் தங்களது குடும்பத்தினரை போர் முடிந்தது முதல் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்று கூறிக் கதறி அழுதனர். அதை அமைதியுடன் கேட்டுக் கொண்டார் கேமரூன்.
திடீர் போராட்டம்
இந்த நிலையில் கேமரூன் வருகையை எதிர்த்து இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட சிலர் நூலகப் பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர். அவர்கள் சிங்களர்களா அல்லது அரசு ஆதரவு தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை.
தமிழர்களைச் சுற்றி நின்ற போலீஸ்
தமிழர்கள் கேமரூனைச் சந்தித்தபோது அவர்களைச் சுற்றிலும் போலீஸார் பெரிய பெரிய தடிகளுடன் நின்றிருந்தனர்.
உதயன் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் போன கேமரூன்
அதேபோல சிங்களர்களின் தாக்குதலுக்குள்ளான உதயன் தமிழ்ப் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் போனார் கேமரூன். அங்கு பத்திரி்க்கையாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழர் முகாமுக்கும் விஜயம்
அதேபோல அகதிகளாக தமிழர்கள் தங்கியுள்ள பகுதிக்கும் விஜயம் செய்தார் கேமரூன். அங்கும் தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களது மோசமான நிலையை விவரித்தனர். இங்கும் ஒரு அரசு ஆதரவு கும்பல் வந்து நின்று போராட்டம் நடத்தியது.
போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை
கேமரூன் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சந்திக்க வந்தபோது அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச சமுதாயம் நடத்த வேண்டும் என்று கோரி அமைதியான முறையில் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
பலத்த பாதுகாப்பு
கேமரூன் வருகையைத் தொடர்ந்து பலாலி விமான தளத்திலும், அவர் சென்ற இடங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் தமிழர்களிடையே உற்சாகம்
டேவிட் கேமரூன் திடீர் வருகையால் யாழ்ப்பாணம் தமிழர்களிடையே உற்சாகம் காணப்பட்டது. பலரும் அவரைக் காண திரண்டு வந்தனர்.