இலங்கையில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகள் கட்டுவதால் போராட்டங்கள்- பதற்றம்
யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மலையகம் ஆகியவற்றில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகளை கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர் வாழும் பகுதிகளில் அசாதாரண நிலை உருவாகி உள்ளது.
மலையகப் பகுதியான நுவரெலியாவில் கந்தப்பளை தோட்டப் பகுதியில் மாடசாமி காவல்தெய்வம் உள்ளது. இந்த கோவிலில் பொலநறுவையை சேர்ந்த பவுத்த பிக்கு பவுத்த கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.
இதனைக் கண்டித்து மலையகத் தமிழர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பவுத்த கொடியை அகற்றினர்.
இதேபோல் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கிண்ணியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலையும் ஆக்கிரமித்து பவுத்த விவகாரை அமைக்கும் பிரச்சனை பெரும் பதற்றமாக வெடித்துள்ளது. பிள்ளையார் கோவிலை இடித்து பவுத்த விகாரைகள் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் வடக்கு மாகாணத்தில் முல்லைத் தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலையத்தில் பவுத்த விவகாரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிள்ளையார் கோவிலில் கட்டப்பட்ட நந்தி கொடிகளும் அறுக்கப்பட்டன.
இந்த விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் எம்.பிக்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது அடாவடியாக விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தப்பட்டது.