நவி பிள்ளையிடம் முறையிட்ட தமிழ்சிறுமி கடத்தல்: இலங்கை ராணுவம் கைவரிசை
கிளிநொச்சி: தனது அண்ணன்கள் காணாமல் போனது குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் முறையிட்ட கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா என்ற 13 வயதுடைய சிறுமியை இலங்கை ராணுவத்தினர் கடத்தி சென்றனர்.
காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர் சிறுமி விபூசியா. ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல் போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றவர் சிறுமி விபூசியா.
இந்நிலையில் கிரிமினல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி இலங்கை ராணுவத்தினர் அச்சிறுமியின் வீட்டினைச் சுற்றி வளைத்திருந்தனர்.
அச்சிறுமி கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த மறுகணம், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா சபைக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன், காணாமல் போனவர்களது உறவினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமாறும் கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அரசின் அத்துமீறல்கள் அனைத்துலக ஊடகங்களில் அம்பலப்பட்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினை அனைத்துலக ஊடகப்பரப்பிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றது.
ஆனால் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, இலங்கை ராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலை மூடிமறைத்துள்ளார்.