ஈழத்தின் எல்லை சுருங்கிவிட்டதாம்.. உள்ளாட்சி வெற்றி மமதையில் ராஜபக்சே எகத்தாளம்
தமிழீழத்தின் எல்லை சுருங்கிவிட்டது என கிண்டலடித்துள்ளார் ராஜபக்சே.
கொழும்பு: உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மமதையில் ஈழப் பிராந்தியத்தின் எல்லை மிகவும் சுருங்கிவிட்டது என கிண்டலடித்துள்ளார் மகிந்த ராஜபக்சே.
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜபக்சே வியூகம்
இலங்கை அரசியலில் ராஜபக்சேவின் கை ஓங்குவதால் பிரதமர் ரணில், அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திர கட்சியைக் கைப்பற்றுவதற்கும் மகிந்த வியூகம் வகுத்து வருகிறார்.
தேர்தல் நடத்த கோரிக்கை
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்; இலங்கையின் வரலாற்றில் ஆளும் கட்சிகளை எதிர்க்கட்சியானது உள்ளாட்சி தேர்தலில் தோற்கடித்த முதல் வரலாறு நிகழ்ந்திருக்கிறது என கூறினார்.
ராஜபக்சே கிண்டல்
அப்போது, இலங்கை தேர்தல் முடிவுகளை வெளியிட்ட பத்திரிகை ஒன்றை காண்பித்து, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எமது கட்சியின் அரக்கு நிறம்தான் இருக்கிறது. ஈழ பிராந்தியம் என்பது கூட சுருங்கிப் போய்விட்டது என கிண்டலடித்திருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி
சிங்களர் பகுதியில் ராஜபக்சே வென்றதைப் போல தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. இலங்கை அளவில் 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,.