இலங்கை தீவிரவாதி ஹாசீமும் கூட்டாளிகளும் செய்த கொலைகள்.... உண்மையை கக்கிய டிரைவர் 'கபூர்' மாமா!
அம்பாறை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய நாசகார தீவிரவாதி சஹ்ரான் ஹாசீமின் ஓட்டுநரான கபூர் மாமாவை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஹாசீமின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இலங்கை தலைவராக செயல்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஹாசீம். தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்து இஸ்லாமிய தனிநாட்டை உருவாக்க சதித் திட்டம் தீட்டியிருந்தார் சஹ்ரான்.
இதன் ஒரு பகுதியாக இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்களை குறிவைத்து மனிதவெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் சஹ்ரானும் மனித வெடிகுண்டாக தாக்குதல் நடத்தினார். உலகை அதிரவைத்த இத்தாக்குதல்களில் 359 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணையில் சஹ்ரான் ஹாசீமின் ஓட்டுநரான 'கபூர் மாமா' ( முகமது சரீப் ஆதம் லெப்பை) என்பவர் சிக்கினார். அவரிடம் துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணைகளில் உண்மைகளை தெரிவித்து வருகிறார்.
வவுணதீவு என்ற இடத்தில் போலீசாரை படுகொலை செய்ததுதான் ஹாசீம் கும்பலின் முதலாவது கொலையாம். 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ல் மட்டக்களப்பு வவுணதீவில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டுக் கொன்றும் மற்றொரு போலீசாரை கழுத்து அறுத்தும் இத்தீவிரவாத கும்பல் படுகொலை செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமைச்சர் கபீர் ஹாசிம்மின் உதவியாளரான முகமது தஸ்லிம் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அத்துடன் தீவிரவாதிகள் ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்த இடங்களையும் கபூர் மாமா போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அப்பகுதிகளில் சோதனையிட்டு ஆயுதங்கள், பிரசுரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் ஹாசீமின் நெருங்கிய கூட்டாளிகளான காத்தான்குடி அப்துல் மனாம் முகமது பிர்தவ்ஸ், காத்தான்குடி தெற்கைச் சேர்ந்த ஹம்சா மொகைதீன் முகமது இம்ரான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கபூர் மாமா மற்றும் ஹாசீமின் கூட்டாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த அதிரடி.. இலங்கையில் புர்கா அணிய தடை விதித்தார் அதிபர் சிறிசேனா.. கோபத்தில் மக்கள்!