சரணடைந்த 'புலிகளின்'தளபதிகளையும் பாலச்சந்திரனையும் கொல்ல உத்தரவிட்டது ராஜபக்சே- மங்கள சமரவீர சூசகம்
கொழும்பு: இலங்கை இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்தவர்கள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோரை சுட்டுப் படுகொலை செய்ய வேண்டிய தேவை ராணுவத்தினருக்கு இல்லை.. ஆனால் உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். அத்துடன் அவர்களிடம் விசாரணை நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபாய ராஜபக்சேதான் காரணம் என்பதை மங்கள சமரவீர மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா. விசாரணை அறிக்கை மீதான விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர பேசியதாவது:
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றி சிலர் அர்த்தமற்ற வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உண்மை என்னவென்பது தெரிந்திருந்தும் கூட குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் விஷமப் பிரசாரங்களை பரப்புகின்றனர்.
முந்தைய அரசு சிறந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றவில்லை. ஏனெனில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக 12 நாடுகளே குரல் கொடுத்தன. மற்ற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடும் அதிருப்தியில் இருந்தன.
இதனால், சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது.
அதன் பயனாக குறுகிய காலத்துக்குள் எம்மால் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெறமுடிந்தது. அத்துடன் அமெரிக்காவின் யோசனையை இலங்கையின் யோசனையாக மாற்றினோம். இலங்கையின் முன்னாள் அரசால் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் உறுப்பு நாடுகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டன.
எனினும், தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளும் தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 20 வது பத்தி மிக முக்கியமானதாகும்.
அதில் எதைச் செய்வதாகஇருந்தாலும், இலங்கை அரசின் தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகளை பெற்று அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கலப்பு நீதிமன்றம் பற்றி பேசப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு யோசனையும் அதில் இடம் பெறவில்லை.
கம்போடியாவில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.அதற்கான நீதிபதிகளை ஐ.நா. பொதுச் செயலளர் தான் நியமித்தார். இங்கு அப்படி ஒன்றும் நடைபெறாது. எந்த நாட்டவர் வந்தாலும் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே விசாரணை நடைபெறும். இலங்கை ராணுவத்துக்கு உலகில் நன்மதிப்பு இருந்தது. ஒரு சிலரின் செயல்பாட்டால் ஒட்டு மொத்த ராணுவத்துக்கும் கலங்கம் ஏற்பட்டது.
எனவே ராணுவத்தின் நன்மதிப்பை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான விசாரணை அவசியம் சேனல் 4 ஊடகம் போர்குற்ற ஆவணங்களை வெளியிட்டபோது அதன் செய்தியாளர்களை விமர்சித்தார்கள். ஆனால் இலங்கை அரசு சேனல் 4 வீடியோவை நிராகரிக்கவில்லை. அதுபற்றிய நீதிமன்ற விசாரணை அவசியம் எனக் கூறியுள்ளது.
இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை சுட வேண்டிய கட்டாயம் ராணுவத்தினருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை....உயர்மட்ட அளவில் இருந்து வந்த கட்டளையின்படியே இது நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு கட்டளை பிறப்பித்திருந்தால் அவர்களை விசாரிக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் அவசியம்.
இவ்வாறு மங்கள சமரவீர பேசினார்.
அதாவது வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் பாலச்சந்திரனையும் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே ஆகியோர் உத்தரவில்தான் ராணுவம் படுகொலை செய்திருக்கலாம்; ஆகையால் அவர்களை விசாரிக்க ஏதுவாக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் மங்கள சமரவீர மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.