இன்று... ஈழத்துக்காக திலீபன் தன்னையே அழித்துக் கொண்ட தினம்!
Recommended Video
செப்டம்பர் 26 / 1987, நல்லூர் கந்தசாமி கோயில்...
அதிகாலை... மின்சாரம் துண்டித்தது. மேடையில் மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. காற்றில் அணைந்தது அது. பின்னர் ஏற்ற முடியவில்லை. இருட்டில் கழிகிறது நேரம். மின்சாரம் வந்துவிட்டது.
திலீபன் உடலை இரண்டு மூன்று பேரின் கரங்கள் தொட்டுப்பார்க்கிறது. உடம்பு ஈரமாய் இருக்கிறது. குளிரத் தொடங்கியதாய் உணர்கிறார்கள்.
முந்தைய இரவில் தான் படுத்திருந்த கட்டில் மாற்றப்பட்டது. மூச்சுவிடுவது லேசாய் உணரப்பட்டாலும் கையும் காலும் அதிகமாய் ஆடியது. அதுவரை படுத்திருந்தது சிறிய கட்டில் என்பதால் பெரிய கட்டிலுக்கு மாற்றினார்கள். அப்போதுதான் திலீபன் உடலில் இருந்து லேசாய் சிறுநீர் வெளியேறி இருந்தது. உடையையும் மாற்றினார்கள். உடை மாற்றிக் கொள்வதை ஆடம்பரம் என்று நினைப்பவன் அவன். அதைத்தடுக்கும் சக்தியை 24 மணி நேரத்துக்கு முன்பே இழந்துவிட்டான்.
1 கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்
3 மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது.
4 நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது
5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது
- தனது நண்பர்களிடம் மறைமுகமாக திலீபன் வாங்கிய சத்தியங்கள்.அடுத்தவர்களுக்காக அல்ல தனக்கு உண்மையாக இருக்க நினைத்தவன்.
அந்தப் பன்னிரெண்டு நாளில் மூன்று முறை மக்களிடம் பேசினார். "நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்." - திரும்பத் திரும்ப இதையே சொன்னார்.
அவர் விரும்பிக் கேட்கும் கவிதையை திரும்பத்திரும்ப வாசித்தார்கள்:
ஓ! மரணித்த வீரனே! - உன்
ஆயுதங்களை எனக்குத் தா..
உன்
சீருடைகளை எனக்குத் தா
உன்
பாதணிகளை எனக்குத் தா
ஓ! மரணித்த வீரனே!
- 25ம் தேதி இந்தப் பாடல் பாடப்பட்டபோது கேட்கும் நிலையில் திலீபன் உடல்நிலை இல்லை.
26ம் தேதி காலை 10 மணி 48 நிமிடம் உடலில் உயிரே இல்லை.
-இன்று திலீபன் 30வது நினைவு தினம். தமிழ் ஈழத்துக்காக 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து 26 / 1987-ல் தன் உயிரைத் துறந்தார் திலீபன்.
- கௌதம் வீ