தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது : ஹாசினியின் தந்தை உருக்கம்
தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று சிறுமி ஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
செங்கல்பட்டு : குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைத்ததன் மூலம் ஹாசினியின் மரணத்திற்கு நீதிகிடைத்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று ஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறுமி ஹாசினி கொலைவழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரண தண்டனை விதித்தார்.
இதனையடுத்து ஹாசினியின் தந்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கதறி அழுதார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த ஒரு வருடமாக என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. இந்த சம்பவம் என்னை மிகவும் அலைக்கழித்தது.
இந்த தீர்ப்பு என்னை நிம்மதி அடைய வைத்துள்ளது. இதன் மூலம் என் மகள் மீண்டும் உயிர் பெற்று வரமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இது போன்ற தவறு செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இந்த வழக்கு நடைபெறும் காலத்தில் என்னிடம் பலர் நீதித்துறையை நம்பவேண்டாம். நீதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும் என்று கூறினார்கள். ஆனால், இன்று இந்தத் தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்த தீர்ப்பிற்காக என்னோடு போராடிய எங்களது தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று உருக்கமாகப் பேசினார்.