படகுகளை விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் இலங்கையில் உண்ணாவிரதம்
கொழும்பு: இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 111 மீனவர்கள் தங்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி அங்கு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் பிடிக்க 111 மீனவர்கள் சென்றனர். அப்போது அவர்களையும், அவர்களது 15 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 111 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் மீனவர்களின் படகுகளை நீதிமன்றம் விடுவிக்கவில்லை.
இதனால் தங்களது படகுகளை விடுவிக்கும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம் என நாகை மீனவர்கள் அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த தகவல் நாகையில் உள்ள மீனவர்களுக்கு கிடைத்தது. இதனையடுத்து அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.