தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது: இலங்கை அரசு திட்டவட்டம்
கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களுக்கு மகிந்த அமரவீர நேற்று அளித்த பேட்டி:
அனைத்துலக கடல் எல்லையை மீறிய போது இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதில்லை என்று இலங்கை அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளது.
இந்தப் படகுகளை விடுவிக்குமாறு பல்வேறு சக்திகள் எமக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம்.
100 இழுவைப்படகுகள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ஊடுருவல்கள் படிப்படியாக குறைவடையும்.
ஆனால் அத்துமீறும் மீனவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவிப்போம். அவர்களை நீண்டகாலத்துக்குத் தடுத்து வைக்கும் எண்ணம் கிடையாது.
இவ்வாறு மகிந்த அமரவீர கூறினார்.