இலங்கை சுதந்திர தினம்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் பங்கேற்பு!!
கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. இலங்கையின் சுதந்திர தினத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் புறக்கணித்தே வந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலங்களில் இலங்கை சுதந்திர நாளையொட்டி மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற பெரும் பீதி இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத நிலையிலும் கூட இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்கள் புறக்கணித்திருந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு இலங்கை சுதந்திர தினத்தில் திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகினர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடையும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.