ஈழத் தமிழரை சித்ரவதை செய்த பாதாள முகாம்- முன்னாள் கடற்படை தளபதி கரன்னகொடவை கைது செய்ய வலியுறுத்தல்!
கொழும்பு: ஈழத் தமிழர்களை கைது செய்து சித்ரவதை செய்வதற்காக திருகோணமலையில் இலங்கை கடற்படையின் பாதாள ரகசிய முகாமை நடத்திய முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடவை கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா. குழு பயணம் மேற்கொண்டது. இக்குழுவினர் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் ஈழத் தமிழர்களை கைது செய்து சித்ரவதை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ரகசிய முகாம் இருப்பதையும் ஐ.நா. குழு கண்டுபிடித்தது. இதை செய்தியாளர்களிடமும் ஐ.நா. குழு அம்பலப்படுத்தியது.
மேலும் இலங்கை தொடர்பான தஸ்ரூமன் குழுவில் இடம்பெற்றிருந்த யாஸ்மீன் சூகாவும், தமிழ் அரசியல் கைதிகளை திருகோணமலை சித்ரவதை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படை அதிகாரிகள் விவரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடவோ, அந்த பாதாள சித்ரவதை முகாம்கள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை. அதில் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருந்தோம். சித்ரவதை எதுவும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், திருகோணமலை கடற்படை முகாமில் ரகசிய சித்ரவதை முகாம் இருந்தது; அதில் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவரை கைது செய்து யார் யார் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது உள்ளிட்ட விவரங்களைப் பெற விசாரிக்க வேண்டும் என்றார்.