மைத்ரிபால அரசில் 9 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை!!
கொழும்பு: இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசில் 9 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மைத்ரிபாலவை அதிபர் தேர்தலில் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் சேரவில்லை.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இதில் 9 தமிழர்கள் உட்பட 45 பேர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்ற தமிழர்கள்:
ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன்- மீள்குடியேற்றம், மறுவாழ்வுத்துறை
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்- நகர அபிவிருத்தி
மலையக மக்கள் முன்னணியின் ராதாகிருஷ்ணன்- கல்வி
பைசஸ் முஸ்தபா - விமானப் போக்குவரத்துத்துறை
வேலாயுதம்: பெருந்தோட்ட கைத்தொழில் துறை
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம்- முதலீட்டு ஊக்குவிப்பு துறை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் - தொழில், வர்த்தகத்துறை
தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்புத்துறை
விஜயகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகாரத்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை..
இருப்பினும் மைத்ரிபால சிறிசேன அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை. முன்னதாக மைத்ரி பால சிறிசேனவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் நிலப்பிரச்சனைகள், சிறையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை, இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்துகொள்ளுவதற்கான உடனடி வாய்ப்பு இல்லை என்றார்.