புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழர்.. இலங்கை கடற்படை தலைமைத் தளபதியானார்!
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக தமிழர் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு: இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக தமிழரான ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் தற்போதைய தளபதி ரவீந்த்ர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைவராக நியமிக்கப்படுகிறார். இதையடுத்து ட்ரெவிஸ் சின்னையா புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டியில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கடற்படை அதிகாரிக்கான படிப்படை நிறைவு செய்தார்.
இங்கிலாந்தில் கடற்படை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியை ட்ரெவிஸ் சின்னையா நிறைவு செய்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கடற்படை தாக்குதல்களில் ட்ரெவிஸ் சின்னையா முக்கிய பங்கு வகித்தவர்.
ஆனால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேவால் ஓரம்கட்டப்பட்டிருந்தார் ட்ரெவிஸ் சின்னையா. 2016-ல் கிழக்கு மாகாண கட்ற்படை தளபதியாகவும் பணியாற்றி வந்தார் ட்ரெவிஸ் சின்னையா என்பது குறிப்பிடத்தக்கது.