இலங்கையில் பான் கி-மூன் ... முகாமில் வசிக்கும் தமிழர்களை நாளை சந்திக்கிறார்!
கொழும்பு: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன், இலங்கைக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அவர், அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பான் கி-மூனின் 3 நாள் பயணத்தின் முதல் நாளான நேற்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்பில் சந்தித்து பேசினார். இன்று இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறிசேனாவை சந்தித்து பேசுகிறார். இதே போன்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர்கள் தங்கி இருக்கும் முகாமுக்கு நாளை சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளார் பான் கி மூன்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை நீதிபதிகள்தான் இந்த விசாரணையை நடத்துவார்கள் என்று இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் இந்தப் பயணத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற பான் கி-மூன் தற்போது 2வது முறையாக அங்கு சென்றுள்ளார்.